பிரபல திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி ‘சினிமாவின் ஆன்மா’ (திரைப்பட ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்) என்ற சிறார்களுக்கான நூலை எழுதி இருக்கிறார். சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது என்றும் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்றும் பலரது பாராட்டுகளை இந்த நூல் பெற்றுள்ளது.
திரைப்பட கலையை பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரசனை கல்வியாக அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அடுத்த தலைமுறை மாணவர்களிடம் சினிமா குறித்த ஆழமான புரிதலையும், நல்ல ரசனையையும், மனிதநேயத்தையும் வளர்க்கும் நோக்கில் இந்த நூலை சீனுராமசாமி உருவாக்கி உள்ளார். இதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய மிக முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நூலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தை இணையதளம் மூலம் வாங்கலாம்.
சீனுராமசாமி விஜய்சேதுபதியின் தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை டைரக்டு செய்து முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இன்னொரு புறம் நூல்கள் எழுதி வெளியிட்டு புகழ் பெற்ற எழுத்தாளராகவும் வலம் வருகிறார்.
சீனுராமசாமி எழுதிய ஆறாவது கவிதை தொகுப்பான ‘மேகங்களின் பேத்தி’ எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (fetna) 34-வது பேரவை விழாவில் வெளியிடப்பட்டது.























