பிரபல திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகனை அ.தி.மு.க எம்.எல்.ஏவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான தளவாய் சுந்தரம் பரிந்துரையின் பேரில் அ.தி.மு.க கலைப்பிரிவு செயலாளராக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கலைப்பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு மேலத்தெருவை சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அனபழகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அ.தி.மு.க கலைப்பிரிவுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இதுபோல் கழக வர்த்தக அணி துணைச் செயலாளராக ஏ.டி.ரவிந்திரவர்மன் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு கழக உடன்பிறப்ப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்’’
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாஞ்சில் அன்பழகன் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் ரசிகன், தேவா படங்களுக்கு உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். முரளி நடித்த காமராசு மற்றும் அய்யாவழி, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். நட்சத்திர மழை,, நிழலோவியம், விதைக்குள் விழுதுகள், அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர், மனிதப்பிழை உள்ளிட்ட நூல்களையும் 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.
நாஞ்சில் அன்பழகன் 2010-ல் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மூலம் மறைந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டார். அ.தி.மு.க கலைப்பிரிவு இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். திரைப்படத் துறை நலவாரிய உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். 500-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 200-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விவதங்களிலும் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க கலைப்பிரிவு செயலாளராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டு உள்ளார்.






















