முதல் அமைச்சர் விஜய் பிறந்த நாளையொட்டி சம்பள உயர்வு கோரிக்கைகளுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் நூதன போஸ்டர் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் வருமாறு:-
‘’ஜூன் 22ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியலையே புரட்டி போட்ட மாண்புமிகு தமிழகம் முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! சுகாதாரத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் முதல்வரின் பிறந்த நாள் பரிசாக:
1. கடந்த 5 ஆண்டுகளாக கண்ணீர் சிந்தி வரும், கொரோனா போரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்கள் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலைக்கான ஆணை
2. கடந்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிகளில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு.
3. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பல் மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம்.
4. மக்களுக்கு மருத்துவ சேவை சிறப்பாகவும், எளிதாகவும் கிடைத்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியிடங்களை 2 மடங்காக அதிகரித்திட வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட முதல்வரை வேண்டுகிறோம்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (Legal Coordination Committee for Government Doctors – LCC)
இவ்வாறு போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.





















