தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர். செளந்தரராஜா தொடர்ந்து சமூக சேவைப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி மரக்கன்றுகள் நட்டு வருகிறார். இந்த நிலையில் செளந்தரராஜாவின் சமூக சேவைப்பணிகளை பாராட்டி அவருக்கு நார்வே தமிழ் திரைப்பட விழாவில் ‘கலைமகன் 2025’ என்ற விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றது குறித்து செளந்தரராஜா கூறும்போது, ‘’நான் 15 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறேன். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். இதை தாண்டி சமூக பணிகளிலும் பங்கேற்று வருகிறேன். மரக்கன்றுகள் நடுகிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறுதிவரை போராடியவர்களில் நானும் ஒருவன்.
நெடுவாசல், நீட் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், காவிரி நீர் பிரச்சினை, விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் நடந்த போராட்டங்கள் என்று நிறைய மக்கள் பிரச்சினைகளில் குரல் கொடுத்து இருக்கிறேன். இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேல் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். நேர்மையான இயற்கை விவசாயிகளுக்கு விருது மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையை ஆறு மாதங்களுக்கு ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறேன். நடிகனாகவும் சமூக ஆர்வலராகவும் பல விருதுகளை பெற்று இருக்கிறேன்.
தற்போது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் ‘கலைமகன் 2025’ விருதை நார்வேயில் உள்ள ஒஸ்லோ மேயர் அமீனா மெபல் ஆண்டர்சன் மற்றும் ஈழத்தமிழர் வசீகரன் ஆகியோர் கைகளால் வாங்கியதை பெருமையாகவும் உலக தமிழர்களின் பாராட்டாகவும் கருதுகிறேன்.
இந்த விருது எனக்கு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்து இருக்கிறது. விருதை உலகெங்கும் உள்ள நேர்மையான இயற்கை விவசாயிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்,” என்றார்.





















