ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்‘.இதில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடித்துள்ளனர்,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா. மீசை ராஜேந்திரன், காமராஜ், குழந்தை சாய் சைந்தவி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.
‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற விழாவில் கங்கை அமரன் வெளியிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அ.தி.மு.கவைச் சேர்ந்த ஈ.புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் வரவேற்றுப் பேசும்போது. “நாங்கள் பெங்களூருவல் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம். ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது .அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது .இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்
நாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,”பெங்களூருவில் இருந்த படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத்தான் வைப்பார். அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம்.
சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.
ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவாபாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. பாடல் காட்சிகளைப் பார்த்தோம். கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்‘ என்றார்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தார்.





















