‘பரமு’, ‘செல்பிஷ்’ படங்களை இயக்கிய மாணிக் ஜெய். என். இயக்கத்தில் தயாராகி உள்ள மூன்றாவது படம் கைமேரா. ‘வச்சுக்கவா’ படத்தில் நாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்ற படம் மூலம் இயக்குனராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ், கன்னட மொழிகளில் தயாராகி உள்ள ‘செல்பிஷ்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ‘கைமேரா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அறிமுக நாயகனாக எல்என்டி எத்திஷ் நடித்துள்ளார். கதையின் நாயகிகளாக செளமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி ஆகிய மூன்று பேர் நடித்துள்ளனர். தாரை கிருஷ்ணன், ரஞ்சித்குமார் மற்றும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாணிக் ஜெய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் மாணிக் ஜெய் கூறும்போது, ‘’மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
மிருகங்களுக்குள்ளேயே வேறு மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு அதன் குணாதிசயங்கள் எவ்விதம் மாறுபட்டு இருக்கின்றன என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. அதை மையப்படுத்தித் தான் ‘கைமேரா’ என டைட்டில் வைத்துள்ளோம்.
கைமேரா என்பது மராத்திய மொழி வார்த்தை. இதை மனோ ராஜ்ஜியம் (மரபணுக்கள் மாற்றம்) என சொல்லலாம்.
பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டார்..
சயின்டிஃபிக் கிரைம் திரில்லர் படம் இது. புதிய கோணத்தில் யாரும் சொல்லாத ஒரு கதையாக புது அனுபவமாக இருக்கும். சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு ஒரு யூகிக்க முடியாத கதையாக இது இருக்கும் அதேசமயம் படம் முழுவதிலும் நகைச்சுவைக்கு குறைவில்லாமலும் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும்.. ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்திற்கு புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைத்துள்ளோம்..
இந்தப் படத்தை எந்த மொழியில் பார்த்தாலும் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.
இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உன்னி கிருஷ்ணன், சத்யபிரகாஷ், பிரசன்னா,. அனுராதா பட், மானஸா ஹொல்லா மற்றும் அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்கள் பாடியுள்ளனர்.
பிரபல பாடகி அனுராதா பட்டுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடித்துப்போனதால் எல்லா மொழியிலும் நானே பாடுவேன் என விரும்பி கேட்டு ஒரு பாடலை ஐந்து மொழிகளிலும் பாடியுள்ளார்.
தற்போது சென்சாருக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையடுத்து அனைத்து மொழிகளிலும் இதற்கான புரமோஷன் பணிகள் துவங்கப்பட இருக்கின்றது, விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது” என்றார்.
வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை:விக்னேஷ் ராஜா, படத்தொகுப்பு: நவீன், ஸ்டண்ட்:சூரி, மக்கள் தொடர்பு:ஏ.ஜான்






















