பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரிலும் காந்தியின் வாழ்க்கையை வெல்கம் பேக் காந்தி என்ற பெயரிலும் படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன் பட நிறுவனம் தற்போது திருக்குறளை மையமாக வைத்து ‘திருக்குறள்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.
திருக்குறள் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
‘’ இயக்குநர் ஏற்கனவே காமராஜ், வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்து இயக்கி வெளியிட்ட பெருமைக்குரியவர். இந்த திரைப்படத்திற்கு வித்தியாசமான கோணத்தில் திருக்குறள் என்று பெயர் சூட்டி இருக்கிறார். கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்த பெயரை சூட்டி இருக்கிறார்.
திருவள்ளுவர் என்கிற பெயர் திருக்குறளை எழுதியவர் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவர்தான் எழுதினார் என்பதற்கு ஆதாரம் இல்லை, அந்த நூலை எழுதியவர் பெயர் இதுதான் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவருடைய பிறப்பு அவருடைய வாழ்க்கை பற்றி, நாம் கேள்விப்படுகிற அனைத்தும் அவ்வப்போது அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களே தவிர காமராஜரை போல உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாறு அல்ல.
திருவள்ளுவர் யார் என்பதை விட, திருக்குறள் என்ன என்பதுதான் மிகவும் முதன்மையானது, அது என்ன சொல்லுகிறது அதுதான் நமக்கு மக்களுக்கு போய் சேர வேண்டிய செய்தி, ஆகவேதான் திருவள்ளுவர் என்று இந்த திரைப்படத்திற்கு பெயர் பெயர் சூட்டாமல், ஒரு கதாநாயகனை ஆராதிக்காமல், அந்த நூல் சொல்லுகிற வாழ்வியலை, கருத்தியலை, கோட்பாட்டை, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற, மிக உயர்ந்த பார்வையோடு இதனை இயக்குனர் அணுகி இருக்கிறார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
கமல்ஹாசன் பேச்சுக்காக அவரது படத்தை ஓட விடமாட்டோம் என்று எதிர்ப்பு கிளப்புகிறார்கள். ஆனால் எல்லிஸ், ஹென்ரி ஹயசிங்டன் ஆகிய ஆங்கிலேயர்கள் தமிழை கற்று ஆய்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை ஒப்பீடு செய்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் பேசும்போது,’’ இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் எழுதினார் . திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைததார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குறலோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம்.
இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம். அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐடி விஸ்வநாதன் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள்’’என்றார்
























