சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்ற படம்..
கிராமத்தில் வசிக்கும் ஷீலா சிலம்பம் தற்காப்பு கலை பயின்று துணிச்சலான பெண்ணாக வளர்கிறார். தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்பதும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதும் அவரது லட்சியம். பெற்றோர் நிர்ப்பந்தத்தினால் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் ஹரி கிருஷ்ணனை மணந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார்.
இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் ஒரு விபத்தில் சிக்கி பார்வையை இழக்க ஷீலாவின் லட்சிய கணவுகள் தகர்கிறது. குடும்ப சுமையை ஏற்று வருமானம் ஈட்ட போராடுகிறார்.
கணவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்ததா? சிலம்பத்தில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற அவரது லட்சிய கனவு நிறைவேறியதா? என்பது மீதி கதை..
ஷிலாவுக்கு கதையை தாங்கும் அழுத்தமான வேடம். அவரும் அதை புரிந்து சிலம்பம் சுழற்றுவது, பார்வையற்ற கணவனை அன்பாக கவனித்துக் கொள்வது என்று அசாத்தியமான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருப்பது சிறப்பு.
ஹரி கிருஷ்ணன் யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். ஜானகி, மாரிமுத்து ஜெயராவ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பால் நியாயம் செய்துள்ளனர்.
சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிவதை தவிர்த்து இருக்கலாம்.
குமரன் கேமரா கிராமத்து அழகையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் அம்சமாக படம்பிடித்துள்ளது. மணிகண்டன் முரளியின் இசை காட்சிகளோடு ஒன்ற செய்வது பலம்.
பெண்களுக்கு தற்காப்பு கலையின் அவசியம், அவர்களுக்கான சுதந்திரம், சாதிக்கும் வேட்கை போன்றவற்றை நேர்த்தியான திரைக்கதையில் அழுத்தமாக சொல்லி தரமான படைப்பாக கொடுத்து கவனம் பெறுகிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு.





















