சோழிங்க நல்லூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள இ.சி.ஆர். சரவணன் எம்.எல்.ஏ தொகுதி மக்களுக்கு வீதிவீதியாக சென்று நன்றி தெரிவித்து விட்டு மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற அதிகாரிகளை முடுக்கி விட்டு வருகிறார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் தொகுதியில் புதிதாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை வேகப்படுத்தவும் அதிகாரிகளை சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். பொதுமக்களை சந்தித்து கனிவுடன் குறைகளையும் கேட்டு வருகிறார்.
சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் 15 வது மண்டலத்தில் துறை சார்ந்த அதிகாரிகளை இ.சி.ஆர்.சரவணன் எம்.எல்.ஏ சந்தித்து மக்கள் நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற ஆலோசனைகள் வழங்கினார். . அப்போது இ.சி.ஆர்.சரவணன் எம்.எல்.ஏ பேசும்போது, ‘’சோழிஙக் நல்லூர் தொகுதி மக்கள் தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் மீது அதீத நம்பிக்கை வைத்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியதை எனது தலையாய கடமையாக ஏற்றுச் செய்வேன். இதற்காகவே நான் உங்களிடம் கலந்து பேச வந்துள்ளேன். என்னாலோ அல்லது என்னைச் சார்ந்த நபர்கள் மற்றும் நிர்வாகிகளால் எந்த ஒரு இடையூறும் உங்களுக்கு இருக்காது. ஏதேனும் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். உங்களுக்கு எப்போதும் நான் உதவியாகவே இருப்பேன்’’ என்றார்.





















