வேல்ஸ் பல்கலை கழக வேந்தரும் சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மகள் டாக்டர் பிரீத்தா கணேஷ்–லஷ்வின் குமார் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இதில் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில் புதுமண தம்பதிகளான மகள், மருமகனுடன் ஐசரி கணேஷ் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரை சென்னை பிரசாத் லேப்பில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ் பேசும்போது, ‘’விரைவில் சினிமா சம்பந்தமான புதிய அறிவிப்பை உங்கள் முன்னிலையில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம். தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியஷன் தலைவராக இருக்கிறேன். கல்வி, விளையாட்டு, சினிமா போன்றவற்றில் நல்ல முறையில் செயலாற்றி வருகிறோம்.
எல்லாவற்றிலும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் உறுதுணையாக இருக்கிறீர்கள். இனிமேலும் இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நானும் எனது மகளும் மருமகனும் இங்கு வந்து இருக்கிறோம். எங்கள் இல்லத் திருமணத்தை பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்றதற்கு நீங்கள்தான் முதல் காரணம் அதற்காகவும் நன்றி.
திருமணத்துக்கு வந்த முதல் அமைச்சர், முன்னாள் முதல் அமைச்சர், ஆளுநர் மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்திலும் உங்களுடைய ஆதரவை வேண்டுகிறேன்’’ என்றார்.























