கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘’தமிழக முதல்வர் விஜய் அவர்கள் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதிரடியாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த அவரின் மனைவி, தந்தை, குழந்தை, சகோதரி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர்.
தற்போது, பெண்கள் பிரச்சினையில் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் விஜய் அவர்கள், ஏழை மக்களின் வாழ்க்கையை நன்கு அறிந்தவர். எனவே, உயிரிழந்த சபரி வர்மன் மனைவிக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்குவதுடன், அப்பெண்ணின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை வழங்க வேண்டும். கண்டிப்பாக இதில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு பி.டி.செல்வகுமார் ரூ. 1 லட்சம் வழங்கிய மனிதநேயத்தை பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெரிதும் பாராட்டினர்.





















