சந்தானம் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ இதில் கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ படத்தை இயக்கிய எஸ்.பிரேம் ஆனந்த் டைரக்டு செய்துள்ளார். நிஹாரிகா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்கும் இந்த படம் மே 16-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த இந்த படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிம்பு பேசும்போது, ‘’இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.
இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.
இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. சீரியஸான திரைப்படங்கள் நிறைய வருகிறது. பெரிய நட்சத்திரங்கள் ஆக்ஷன் படங்களில் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஜாலியான, காமெடியான, ஃபீல் குட் திரைப்படங்களும் வரவேண்டும். அண்மையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி‘ படத்தை பார்த்தேன், நன்றாக இருந்தது. அந்தக் குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான திரைப்படங்களும் வரவேண்டும். அந்த விஷயத்தில் நாம் அனைவரும் சந்தானத்தை தவற விடுகிறோம். அவர் ஹீரோவாக நடிப்பதுடன் நான் அல்லது ஆர்யா போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்தும் நடிக்க வேண்டும். தமிழ் ரசிகர்களுக்காக அவர் இப்படி நடிக்க வேண்டும் என இந்த மேடையில் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு ஆரம்பமாக ‘எஸ் டி ஆர் 49′ இருக்கும். அந்த வகையில் இனிமேல் சந்தானத்தை அதிக படங்களில் பார்க்கலாம்.
இவ்வாறு சிம்பு பேசினார்.
நடிகர் சந்தானம் பேசும்போது, ‘’சிம்பு என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார். ‘காதல் அழிவதில்லை‘ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் ‘மன்மதன்‘ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிம்பு.
அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும் இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன்.
இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சந்தானம் பேசினார்.





















