திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், பத்திரிக்கையாளர், சமூக சேவகர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி.டி செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி தொடர்ந்து சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-வது ஆண்டு துவக்க விழா சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டும் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு பி.டி.செல்வகுமார் ஆட்டோக்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பி.டி செல்வகுமார் பேசும்போது, ”பத்திரிகையாளராக இருந்து, நடிகர் விஜய்க்கு பி ஆர் ஓ’வாக இருந்து, அவரது வளர்ச்சிக்காக 27 வருடங்கள் உழைத்து, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்வதற்காக கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கி 10-வது வருடத்திற்கு வந்து தற்போது 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய உதவித் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு, மலையோர, பழங்குடி கிராம மக்களுக்கு சென்று சேரும்படி பார்த்துக் கொள்கிறோம்.
கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடகாலம் தொடர்ச்சியாக நாங்கள் செய்த சேவைகளை பாராட்டி, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் எனக்கு ‘மனிதநேயச் செம்மல் விருது’ தந்தார்கள். அதன்பிறகு, நெல்லை மாவட்ட சுற்று வட்டாரத்தில், மலைக் கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், கலையரங்குகள் கட்டிக் கொடுத்துள்ளோம். அந்த சேவையைப் பாராட்டி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் எனக்கு ‘சிறந்த கல்வி சேவையாளர் விருது’ வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
தற்போது 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் ஏழை எளிய ஆட்டோ ஓட்டுநர் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்குவதென தீர்மானித்து செயல்படுத்தியிருக்கிறோம். தற்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன். இந்த வளர்ச்சி சாதரணமாக நடந்துவிட வில்லை. சவால்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் கடந்துதான், வியர்வையும் ரத்தமும் சிந்தி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். எங்களின் சமூக சேவை பணிகள் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும்’’என்றார்.
தொடர்ந்து பி.டி.செல்வகுமாரிடம் ‘நடிகர் விஜய்யின் கட்சியோடு கூட்டணி வைப்பீர்களா?’ என்று கேட்டபோது ”காலச் சுழல் கூடி வந்தால் இணைந்து செயல்படலாம்’’என்றார். கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் பற்றி கேட்டதற்கு, ”விஜய் தனக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.” என்றார். மேலும் ‘’தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவசர அவசரமாக மத்திய அரசு எஸ் ஐ ஆர் நடைமுறைப்படுத்துவது தவறானது” என்றார்.
நிகழ்வில வரவேற்புரை வழங்கிய கலப்பை மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார் பேசும்போது, ”ஏழை எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம்’ என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் கஜா புயல் பாதிப்பின்போது 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்தோம். கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் உதவிகள் செய்தோம். இந்தியாவில் ஓட்டுரிமையில்லாத பர்மா அகதிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள் என பலருக்கும் எங்களுடைய உதவிகள் போய்ச் சேர்ந்தது. எங்களின் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்களை மூன்று முறை அழைத்து அங்கீகரித்துள்ளார்.
பி டி செல்வகுமார், நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு மட்டும் துணை நின்றவர் அல்ல; விஜய் சேதுபதி நடித்த ‘தென்மேற்குப் பருவக் காற்று’ பட வெளியீட்டில் பிரச்சனை வந்தபோது, அதை தீர்க்க உதவி செய்து அவரது வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்” என்றார்.






















